தொழில்துறை ரீதியாக சிங்கப்பூர் தொடர்ச்சியான முன்னேற்றத்தை கண்டு வரும் நிலையில், உலக அளவில் புகழ்பெற்ற கனடா நாட்டை சேர்ந்த தனியார் ஜெட் விமான தயாரிப்பு நிறுவனமான Bombardier, சிங்கை Seletar Aerospace Park பகுதியில் உள்ள தன்னுடைய சேவை மையத்தை சுமார் 100 மில்லியன் டாலர் முதலீட்டில் விரிவு படுத்துவதற்கான பணிகளை துவங்கி இருக்கிறது. ஆசிய பசிபிக் பகுதிகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மையம் விரிவுபடுத்தப்படுவதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
தற்பொழுது செய்யப்படும் இந்த விரிவாக்கம் ஏற்கனவே இருந்த பரப்பளவை காட்டிலும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த விரிவாக்க பணிகளின் மூலம் ஏற்கனவே சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மையத்தின் அளவை கிட்டத்தட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் அந்த நிறுவனம் உயர்த்த இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சிறந்த ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளும் இதனால் உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சேவை மையமானது விமான பராமரிப்பு மாற்றங்கள் செய்தல் மற்றும் விமான கருவிகளை பொருத்துதல் போன்ற விஷயங்களை செயல்படுத்தும். அது மட்டுமல்லாமல் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் தரைதல விமான ஆதரவு போன்ற சேவைகளும் இங்கு வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் விமான பாகங்களை பழுது பார்க்கும் பட்டரையும் இங்கு உருவாக்கப்படுவதால் இதில் தொழில்துறை ரீதியான வேலை வாய்ப்புகளும் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விமான ஊழியர்கள் ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
பாம்பார்டியர் நிறுவனம் தற்பொழுது சிங்கப்பூரில் செயல்படுத்தி வரும் இந்த சேவை மையம் ஏற்கனவே இந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய வணிக விமான பராமரிப்பு நிறுவனமாகவும் மறு சீரமைப்பு மையமாகவும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது செய்யப்படும் இந்த மாற்றம் இதனை உலகிலேயே மிகப்பெரிய மையமாக மாற்றும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் கட்டுமான பணிகள் இந்த 2026 ஆம் ஆண்டில் இரண்டாம் பாதியிலேயே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இதனுடைய செயல்பாடுகள் வருகின்ற 2028 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள பம்பார்டியா நிறுவனத்தின் 300 ஊழியர்களைக் கொண்ட படையில் தற்பொழுது சுமார் 250 உரிமம் பெற்ற பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
