சிங்கப்பூரில் சாலை பாதுகாப்பை இன்னும் அதிகமாக மேம்படுத்துகின்ற நோக்கத்தில் புக்கிட் திமா விரைவுச் சாலையில் புதிய அதிவேக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக நேற்று ஜூன் 26 ஆம் தேதி சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. இது குறித்த முழுமையான தகவலை பின் வருமாறு காணலாம்.
புத்தம்புது கேமரா
சிங்கையின் BKE விரைவுச் சாலையில், உட்லண்ட்ஸ் நோக்கி செல்லுகின்ற திசையில் Turf Club Avenue வெளியேற்றத்திற்கு பிறகு வருகின்ற ஒன்பதாவது கிலோமீட்டர் அடையாள பகுதியில் தான் இப்பொழுது இந்த புதிய கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு அதிவேக மொபைல் கண்காணிப்பு கேமரா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் இது சோதனைக்காகவும், அளவீட்டுக்காகவும் அங்கே பொருத்தப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த சோதனைகள் முடிவடைந்து வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் இந்த கேமரா முழுமையாக செயல்பட தொடங்கும் என்று சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் மிக மிக கவனமாக செயல்படும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
BKE விரைவு சாலையின் குறிப்பிட்ட அந்த பகுதி, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்ற இடமாக மாறி இருப்பதால், வாகன ஓட்டிகள் எப்பொழுதுமே அந்த விரைவுச் சாலையின் வேக வரம்பான 90 கிலோ மீட்டர் என்கின்ற அளவுக்கு மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் நமது சிங்கப்பூர் நில போக்குவரத்து வாரியம் இதே விரைவுச் சாலையில் எக்ஸிட் 10B அருகே ஒரு வேக கட்டுப்பாட்டு பட்டையை உருவாக்கியிருந்தது.
அதனால் இந்த பகுதியை ஒரு ஓட்டுனர் நெருங்கும் பொழுது வேகத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே அது செயல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இப்பொழுது அதே பகுதிக்கு அருகில் ஒரு மொபைல் அதிவேக கேமராவும் பொருத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விரைவு சாலைகளில் நடக்கும் விபத்துகளில் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
குறிப்பாக அதிவேகமாக சென்று போலீசாரிடம் பிடிபடும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 2,01,358 வழக்குகள் பதிவான நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு இதே அளவானது 2,53,550 வழக்குகள் என்ற அளவை எட்டி இருக்கிறது. அதாவது சிங்கப்பூரை பொறுத்தவரை சராசரியாக ஒரு நாளைக்கு 695 பேர் அதிவேகமாக வாகனம் ஓட்டி பிடிபடுவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அதனால் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் தங்களுடன் சோதனைகளை இன்னும் தீவிரபடுத்த தற்பொழுது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரெட் சிக்னல் கேமராக்களிலும் வேகம் கண்டறியும் வசதி செயல்பாட்டுக்கு வந்தாலும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது இந்த மொபைல் கேமராக்கள் பயன்படுத்தப்படுவதாகவும், அதேபோல இனி விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் குறிப்பாக அவர்களுடைய தண்டனை புள்ளிகள் அதிகரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.
