சிங்கப்பூரில் கடந்த ஜூன் 22ஆம் தேதி இங்கு இயங்கி வந்த மூன்று நிறுவனங்களில் பணியாற்றிய 400-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மனிதர்கள் அமைச்சக அலுவலகத்தை அணுகி தங்களுடைய நிறுவனம் முன்னறிவிப்பு இன்றி மூடப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு மாத சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறி தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி கோரிக்கைகளை முன் வைத்தனர்.
உடனடியாக மனிதவள அமைச்சக அதிகாரிகளும், அந்த வெளிநாட்டு ஊழியர்களின் கோரிக்கைக்கு இணங்கி அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கினர். இந்த சூழலில் தான் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் பொதுவான இயக்குனராக செயல்பட்டு வந்த பழனி என்கின்ற சிங்கப்பூர் பிஆர் வைத்திருக்கும் இந்தியர், சிங்கப்பூரை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
அவரை தொடர்பு கொண்டு அவரை நாட்டிற்கு திருப்ப அழைத்து வரும் பணியில் மனிதவள அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்ட அதே நேரம், அடுத்த வேளை உணவிற்க்கு கூட பணமில்லாமல் தவித்த இந்தியா மற்றும் பங்களாதேஷை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடனடியாக உதவ முன்வந்தது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு தங்குமிடமும் உணவும், 200 வெள்ளி ரொக்கமும் கொடுக்கப்பட்டது. மேலும் அவர்களை ஒரே தங்குமிடத்தில் தங்க வைத்து தேவையான வசதிகளை செய்து கொடுத்தது.
இந்த சூழலில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி பழனி மீண்டும் சிங்கப்பூருக்குள் வந்தார். உடனே அவருடைய பாஸ்போர்ட் அவரிடம் இருந்து பெறப்பட்டு தற்பொழுது அவர் அதிகாரிகளின் தீவிர விசாரணைக்கு உடன்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் திடீரென வேலை இழந்தது 400 ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட சிங்கப்பூரில் உள்ள 80 நிறுவனங்கள் மீண்டும் வேலை அளிக்க முன் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.
ஏற்கனவே இதில் 20 ஊழியர்கள் தங்களுடைய பணிகளை தொடங்கிவிட்ட நிலையில் மீதமுள்ள ஊழியர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த துறையில் பணிகள் வழங்கப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் அறிவித்திருக்கிறது. தொடர்ச்சியாக இணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் அவர்கள் தினமும் தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் தங்களுடைய சம்பள பாக்கியை பெற்றுக்கொண்டு தாயகம் திரும்ப விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளை நாங்கள் செய்து வருவதாக அமைச்சகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
