சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான முற்றிலும் மேம்படுத்தப்பட்ட எல்லை தாண்டிய டாக்ஸி சேவைகள் தற்பொழுது புதிய உருவம் பெற்று இருக்கிறது. இதுகுறித்த செய்தி குறிப்பை தற்பொழுது முழுமையாக காணலாம்.

மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே டாக்ஸி போக்குவரத்து என்பது கடந்த சில ஆண்டுகளாகவே சில சர்ச்சைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை தாண்டிய டாக்ஸி சேவைகள் வருகின்ற மே 4ம் தேதி முதல் முற்றிலும் மேம்படுத்தப்பட உள்ளது. சட்டவிரோதமாக நடத்தப்படும் போக்குவரத்து சேவைகளை அடியோடு தடுத்து நிறுத்துவதற்காகவே இரு நாட்டு போக்குவரத்து அமைச்சகங்களும் இணைந்து சில புதிய மாற்றங்களை தற்பொழுது அறிவித்திருக்கின்றனர். அதன்படி “எங்கும் இறக்கிவிடலாம்” (Drop Off Anywhere) என்கின்ற புதிய முன்னெடுப்பை தற்போது இரு நாடுகளும் அமல்படுத்தியுள்ளது.

இதுவரை சிங்கப்பூர் நோக்கி வரும் மலேசிய டாக்ஸிகளாக இருந்தாலும் சரி, அல்லது மலேசியா நோக்கி செல்லும் சிங்கப்பூர் டாக்ஸிகள் ஆக இருந்தாலும் சரி எல்லை தாண்டிய பிறகு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயணிகளை இறக்கிவிட அவர்களுக்கு உரிமம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது பல பயணிகளுக்கு அசௌகரியத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் தங்களுடைய இடத்திற்கு செல்வதில் பெரும் சிரமங்களையும் ஏற்படுத்தி வந்த நிலையில், “எங்கும் இறக்கிவிடலாம்” (Drop Off Anywhere) என்கின்ற புதிய மாற்றம் தற்பொழுது அமலுக்கு வந்திருக்கிறது.

அதன்படி சிங்கப்பூர் டாக்சிகளை பொறுத்தவரை மலேசியாவின் ஜோகர் பாரு, இஸ்கந்தர் புத்திரி, ஃபாரஸ்ட் சிட்டி, குலாய் மற்றும் செனாய் போன்ற இடங்களில் எங்கு வேண்டுமானாலும் பயணிகளை இப்பொழுது இறக்கிவிடலாம். அதேபோல முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொள்ளவும் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் வந்து பயணிகளை அழைத்துச் செல்லும் டாக்ஸிகள் இங்கு உள்ள விவோ சிட்டி, செஞ்சுரி ஸ்கொயர் மற்றும் ஜூன் கூன் MRT நிலையம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லலாம். அதே போல மலேசியாவை பொருத்தவரை Toppen ஷாப்பிங் மையம், mid valley southkey மற்றும் Angsana Mall போன்ற பகுதிகளில் இருந்து பயணிகளை ஏற்றி செல்லலாம்.

இந்த புதிய முன்னெடுப்பின் கீழ் தற்பொழுது இரு நாடுகளில் இருந்தும் தலா 200 டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக அது 300-ஆக வெகு விரைவில் உயர்த்தப்படும். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை தலா 500 டாக்ஸிகள் வரை உயர்த்த திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெரிய அளவிலான குடும்பங்கள் மற்றும் வணிக பயணங்களை பயணிகள் மேற்கொள்ள ஆறு இருக்கைகள் வரை கொண்ட பிரீமியம் வாகனங்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

அதேபோல இந்த புதிய விதிமுறைகளின் கீழ் கட்டண வரம்பும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண நான்கு இருக்கை கொண்ட வாகனத்திற்கு 80 வெள்ளியும், ஆறு இருக்கையில் கொண்ட சாதாரண வாகனங்களுக்கு 120 வெள்ளியும், ஆறு இருக்கைகள் கொண்ட பிரீமியம் வாகனங்களுக்கு 180 வெள்ளியும் வசூலிக்கப்பட உள்ளது. இது பான் சான் சாலை முதல் லார்கின் வரை செல்ல நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமாகும். அதேபோல லார்கின் முதல் சிங்கப்பூர் வர, வாகன வகையை பொறுத்து 240 ரிங்கட் முதல் 540 ரிங்கட் வரை செலவாகலாம். மேலும் இதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கக்கூடாது என்றும். ஏற்கனவே உரிமம் பெற்ற வாகனங்களுக்கு இதிலிருந்து விளக்கு கொடுக்கப்படுவதாகவும் அரசு அறிவித்திருக்கிறது.