உலக அளவில் மக்களை அச்சுறுத்திய ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட சொகுசு கப்பலில் இருந்து சிங்கப்பூர் வந்த இரண்டு சிங்கப்பூரர்களின் தற்போதைய நிலை குறித்து நமது தொற்றுநோய் முகமை ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டு இருக்கிறது. உலக அளவில் 13 பேர் இந்த ஹாண்டா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சொகுசு கப்பலில் இருந்து தான் இந்த ஹாண்டா வைரஸ் பரவியதாக தகவல்கள் முன்பே வெளியானது. இந்நிலையில் அதில் பயணித்த பல பயணிகள் தங்களுடைய சொந்த நாடுகளில் முன்பே தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த சூழலில் அந்த சொகுசு கப்பலில் பயணித்த சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு பயணிகள் சிங்கப்பூர் வந்ததும் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்த பொழுது அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு தென்படவில்லை என்றாலும் கடந்த 42 நாட்களாக வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்படும் வரை அவர்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அந்த இருவரில் ஒருவர் 67 வயதான சிங்கப்பூர் குடிமகன் என்பதும் மற்றொருவர் 65 வயது உடைய ஒரு சிங்கப்பூர் நிரந்தர குடியிருப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவருமே ஆண்கள், கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அன்று வைரஸ் பாதிப்பு இருந்த ஒருவருடன் இவர்கள் விமானத்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இவர்களுக்கும் அந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று எண்ணி இவர்கள் சிங்கப்பூரில் தனிமைப்படுத்தப்பட்டனர். அது மட்டும் அல்லாமல் ஏப்ரல் 1ம் தேதி அர்ஜென்டினாவில் இருந்து புறப்பட்ட MV Hondius சொகுசு கப்பலிலும் இவர்கள் பயணித்துள்ளனர். பின் மே 2 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் திரும்பிய இவர்கள் கிட்டத்தட்ட 42 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த ஜூன் 6-ம் தேதி வரை மருத்துவமனர்களின் கண்காணிப்பில் இருந்தனர்.

இந்த சூழலில் தற்பொழுது அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கடந்த 42 நாட்களில் தெரியவில்லை என்பதால் அவர்களுடைய தனிமைப்படுத்துதல் காலம் தற்பொழுது முடிவடைந்து இருக்கிறது. மேலும் இந்த நோயானது மனிதர்களுக்கு இடையில் பரவுவது மிகவும் குறைவு என்கின்ற ஆறுதல் அளிக்கும் செய்தியையும் வெளியிட்டு இருக்கிறது WHO. மேலும் அந்த சிங்கப்பூரர்கள் இருவரும் தற்பொழுது நலமுடன் இருப்பதினால் நமது நாட்டிற்குள் இது பரவும் அபாயம் குறைவு என்றாலும் அந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் யாரும் வர வேண்டாம் என்றும், குறிப்பாக வெளிநாடு பயணம் கொள்வோர் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.